சரமாரியாக செல்போன்களை திருடி சேட்டு கடையில் அடகு வைத்த பலே திருடன்!
சென்னை: சென்னை கானாத்தூர் போலீஸார் 24 வயதான செல்போன் திருடனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். பிரவீன் குமார் என்ற அந்தத் திருடன் 2000க்கும் மேற்பட்ட செல்போன்களைத் திருடியதாக தெரிய வந்துள்ளது.
இந்தத் திருடன் சிக்கியதும் தற்போது கானாத்தூர் காவல் நிலையததிற்கு எங்களது செல்போன் சிக்கியதா என்று கேட்டு பலரும் போன் செய்கிறார்களாம். பலர் நேரிலும் வந்து குவிகிறார்களாம். இதனால் கானாத்தூர் காவல் நிலையம் பரபரப்பாகியுள்ளது.
கானாத்தூரைச் சேர்ந்த எம்.பாண்டி என்பவர் கேப் காபி டே கடை அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது பிரவீன் குமார் அவரிடம் கத்தியைக் காட்டி செல்போனை பறித்துச் சென்றார். இதுகுறித்து பாண்டி போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரி்ல போலீஸார் விசாரணையில் குதித்தனர். அப்போது உத்தண்டி டோல்கேட் அருகே பிரவீன் குமார் சிக்கினார்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் கத்தியைக் காட்டி செல்போனைத் திருடி வந்ததாக ஒப்புக் கொண்டார் பிரவீன் குமார். அவரிடம் விசாரித்தபோது 2000க்கும் மேற்பட்ட செல்போன்களை அவர் திருடியது தெரிய வந்தது. திருடிய செல்போன்களை சித்தாலப்பாக்கத்சைச் சேர்ந்த சேட்டு ஹனுமான் ராம் என்பவரிடம் அடகு வைத்ததும், விற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து சேட்டு கடையில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அதில் தன்னிடம் பிரவீன் குமார் கொண்டு வந்து கொடுத்த போன்களை அதிக விலை வைத்து விற்று விட்டதாக தெரிவித்தார் ஹனுமான்.
இந்த இருவரிடமும் போலீஸார் நடத்திய சோதனையில் மொத்தம் 2240 செல்போன்கள், ஒரு லேப்டாப், 10 டேப்ளட்கள் சிக்கின.