தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா!
சென்னை: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபமடைந்துள்ளனராம். பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்பது ஒரு கோபம். இன்னொரு கோபம், வலிமையான கூட்டணியை அமைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் தவறியது.
அதை விட பெரிய கோபம், தமிழக பாஜகவில் நிலவும் மிகப் பெரிய கோஷ்டிப் பூசல். இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் எப்படி உருப்பட முடியும் என்று கோபமாக கேட்டாராம் மோடி.
அமித் ஷாவுக்கு வந்த கோபத்துக்கு வேறு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் யாரையுமே தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை, வரவேற்பு தரவில்லை என்பதே அவரது கவலை கலந்த கோபத்திற்குக் காரணமாம். இது நிச்சயம் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்குப் பாதகமாக அமையும் என அவர் கவலைப்படுகிறாராம்.
எத்தனை பேர்
மோடி, அமித் ஷாவுக்கு முன்பே டெல்லியிலிருந்து பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், வெங்கையா நாயுடு, பிரகாஷ் ஜவடேகர் என பல அமைச்சர்கள் வந்து பிரசாரம் செய்தனர். ஆனால் எந்தப் பலனும் இல்லை. இவர்கள் பேச்சை இவர்களது கட்சியினரே கூட கண்டு கொண்டது போலத் தெரியவில்லை.
மோடி வந்தும் யூஸ் இல்லை
இந்த நிலையில்தான் மே 6ம் தேதி சென்னை வந்தார் மோடி. ஒய்எம்சிஏ மைதானத்தில் பேசினார். இந்தியிலேயே பேசினார். அதை தமிழில் ஒருவர் மொழி பெயர்த்தார். ஆனால் கேட்கத்தான் ஆட்கள் இல்லை. பெரும்பாலான இருக்கைகள் காலியாகக் காற்று வாங்கின.
டென்ஷனில் மோடி - ஷா
இதேபோல ஷா போகும் இடமெல்லாமும் கூட சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. கூட்டம் சேரவில்லை. இதனால் அவரும் மோடியைப் போலவே தமிழக தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
பெயரைக் கெடுத்துட்டீங்களே
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை உள்ளிட்டோரிடம் மோடி பேசும்போது எனக்கென்று ஒரு நல்ல பெயர் உள்ளது. அதை சரியாக பயன்படுத்தத் தவறி விட்டீர்கள். அதைச் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. நமக்கு நல்ல வெற்றி வாய்ப்பும் கிடைத்திருக்கும் என்றாராம்.
இப்படிக் கோஷ்டி கானம் பாடிக் கொண்டிருந்தால்
அமித் ஷாவோ, கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசலையும், விஜயகாந்த்தைத் தக்க வைக்க முடியாமல் போனதையும் வைத்து கோபத்தைக் காட்டியுள்ளாராம்.
விஜயகாந்த்தை விட்டுட்டீங்களே
அவர் பாஜக தலைவர்களிடம் பேசுகையில் விஜயகாந்த்தை தக்க வைக்காமல் விட்டது தவறு. அவர் இருந்திருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைந்த கூட்டணி பிரிந்திருக்கக் கூடாது. வலுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் பல கோஷ்டிகளாக சிதறிக் கிடக்கிறீர்கள். பிறகு எப்படி கட்சி உருப்படும். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு இல்லையே என்று கோபமாக கேட்டாராம்.
மொத்தத்தில் பாஜகவினர் அப்படியே "ஷாக்" ஆகிப் போய்க் கிடக்கின்றனர்.. தேர்தல் முடிவு எப்படி வருமோ என்று நினைத்து!
எல்லாத்துக்கும் காரணம் ஈகோ
தமிழக பாஜக இப்படி டண்டணக்கா ஆகிப் போக காரணம் மாநிலத் தலைவர் தமிழிசையின் ஈகோவும் காரணம் என்கிறார்கள் சிலர். தானே எல்லாம், கட்சி தனது கட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறாராம். இந்தப் போக்கால்தான் கஷ்டப்பட்டு கட்சிக்கு கூட்டி வந்த நெப்போலியனைக் கூட இவர்களால் தக்க வைத்துக் கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை.