சென்னை நந்தனம் மைதானத்தில் மே 6ல் மோடி பிரச்சாரம் - அலை வீசுமா?
சென்னை: திராவிட கட்சிகளின் கோட்டையான தமிழகத்தில் வரும் மே 6ம் தேதியன்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 16ம் தேதியன்று நடைபெறவுள்ளது. வேட்புமனுதாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்ப்பில் ஈடுபட்டுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள பாஜக, பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகிறது.
மத்திய அமைச்சர்கள்
தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் மோடி அரசின் சாதனைகளை கூறியே அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஸ்மிருதி இரானி
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இன்று சென்னை தியாகராய நகர், விருகம்பாக்கம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
அமித்ஷா வருகை
ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் மே 4ல் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.
மோடி வருகை
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மே 6ம் தேதி ஓசூர், சென்னையிலும் 8ம் தேதி வேதாரண்யம், கன்னியாகுமரியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிரச்சாரம்
சென்னை மாநகர், புறநகர் தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 6ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாபெரும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுவிலக்கு
கடந்த 50 ஆண்டுகாலமாக ஊழலில் திளைத்துப் போன திமுக, அதிமுக கட்சிகளிடம் இருந்து மாற்று தேவை என தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இந்த கட்சிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. திமுகவும், அதிமுகவும் மதுவிலக்கு பற்றி பேசிவருகிறார்கள். ஆனால், குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதன் மூலம் அதனை பாஜக நிரூபித்துள்ளது என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அலை வீசுமா?
தமிழக தேர்தலில் மோடி அலை வீசாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இரண்டு நாள் தமிழகத்தில் மோடி பிரச்சாரம் செய்யப் போகிறார். இது தாக்கத்தை ஏற்படுத்துமா? பாஜகவிற்கு தடுமாற்றத்தை தருமா பார்க்கலாம்.