அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி - ராமேஸ்வரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
ராமநாதபுரம்: மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பேக்கரும்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்தார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்திலும், பேக்கரும்பிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணிமண்படத்தை சுற்றி டிரோன் கேமராக்களும் கண்காணித்து வருகின்றன.
பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் மண்டபம் சென்று காரில் ராமேஸ்வரம் பேக்கரும்புக்கு வருகை தந்தார்.
அப்துல்கலாம் மணி மண்டபத்துக்கு கார் மூலம் வந்த பிரதமர் மோடியை அமைச்சர்கள் வரவேற்றனர். அங்கே அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை திறந்து வைத்தார். அங்கிருந்த கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.