வீணை மீட்டும் அப்துல் கலாமின் சிலையை திறந்து வைத்தார் மோடி
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தபோது அதன் உள்ளே இருந்த கலாமின் சிலையையும் திறந்து வைத்தார்.
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வீணை மீட்டும் வகையில் இருந்த கலாமின் சிலையை திறந்து வைத்தார்.
மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ரூ.15 கோடியில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமுக்காக மணி மண்டபம் அமைக்கப்பட்டது.
இதை திறந்து வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து மண்டபம் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த அவர், அப்துல் கலாம் மணிமண்டபம் இருக்கும் பேக்கரும்பை அடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கலாம் மணி மண்டபத்துக்கு எதிரே தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் மணி மண்டபத்தை திறந்து வைத்த மோடி உள்ளே சென்று பார்வையிட்டார். கலாம் வீணை மீட்டுவது போன்ற சிலையையும் திறந்து வைத்தார். மேலும் கலாமின் நினைவிடத்தில் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.