மோடி மிக எளிமையானவர்... ரூ. 10 லட்சம் 'சூட்' சர்ச்சை குறித்து தமிழிசை விளக்கம்
சென்னை: அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்த போது, பிரதமர் மோடி விலையுயர்ந்த ஆடை ஒன்றை அணிந்ததாக உருவான சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில், ‘மோடி மிகவும் எளிமையானவர்' என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தார். அப்போது ஒபாமைச் சந்திக்க சென்ற போது மோடி அணிந்திருந்த உடையில், நரேந்திர தாமோதர தாஸ் என்று அவரது பெயர் சிறிய எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், அயல்நாட்டில் தயாரிக்கப் பட்ட அந்த ஆடையின் விலை ரூ. 10 லட்சத்திற்கும் மேல் என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால், மோடியின் ஆடை குறித்து எதிர்க்கட்சிகள் சர்ச்சையை உண்டாக்கின.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை அளித்த பதிலாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மிகவும் எளிமையானவர். அவர் ஒரு அயல்நாட்டுத் தலைவர் வரும்போது எப்படி தனது தோற்றத்தை அமைத்துக் கொள்ளவேண்டுமோ அவ்வாறே அமைத்துக் கொண்டார்.
உண்மை தெரியாமல், மோடியின் சூட் தயாரிக்க லட்சக் கணக்கில் செலவானதாக சிலர் விமர்சிக்கின்றனர். உண்மையில் மோடி மிகவும் எளிமையானவர். மேலும், இயல்பாக ஒரு சூட் தயாரிக்க என்ன செலவாகும் என்பது எல்லாருக்குமே தெரியும் என்றே நினைக்கிறேன்" என்றார்.