அதிமுகவை அலறவிட்ட 'மோடி கணக்கு'
சென்னை: அதிமுகவின் இரண்டு அணிகளிடமும் ஒரேவிதமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார் பிரதமர் மோடி. குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.கவின் 5.5 சதவீத வாக்குகளைத்தான் பிரதானமாகப் பார்க்கிறார். தேர்தல் முடிந்த பிறகு அவருடைய பார்வை மாறும் என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, ஜூலை மாதம் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய இருக்கிறார்கள். நாட்டின் மிக முக்கியமான இந்தப் பதவியைப் பெற, பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் வேட்பாளர் விவகாரத்தில் பிரதமர் மனதில் என்ன இருக்கிறது? என்பதை அவர்களால் கணிக்க முடியவில்லை.
கையிருப்பு இதுதான்
இந்தியா முழுவதும் பா.ஜ.க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கணக்கிட்டால், 48.5 சதவீத வாக்குகள் வருகின்றன. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் உள்ளிட்டவர்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவாக உள்ளனர். இவர்களிடம் இருந்து 7 சதவீத வாக்குகள் கிடைக்க இருக்கின்றன.
தமிழ்நாட்டு வாக்கு நிலவரம்
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அணிக்கு 4.5 சதவீத வாக்குகளும் பன்னீர்செல்வம் அணிக்கு 1 சதவீத வாக்குகளும் உள்ளன. இவற்றைக் கணக்கிட்டால் பா.ஜ.கவின் பலம் அகில இந்திய அளவில் 60 சதவீதத்தை எட்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்படும் பா.ஜ.க வேட்பாளர் மிக எளிதாக வென்றுவிடுவார்.
பலவீன எதிர்க்கட்சிகள்
நாடு முழுவதும் மதச்சார்பற்ற அணி என்ற பெயரில் வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. எனவே, வலுவான வேட்பாளர் நிறுத்தப்படவும் வாய்ப்பில்லை. இதை உணர்ந்துதான், தமிழக அரசைப் பணிய வைக்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்கியது. பிரதமர் எதிர்பார்த்தது போல, அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் பா.ஜ.க மீது விசுவாசம் காட்டுவதில் போட்டி போடுகின்றன என விவரித்தார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.
இருவரும் ஒரே தட்டில்
அவர் மேலும் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒரே தட்டில் வைத்துதான் பார்க்கிறார் மோடி. ஜெயலலிதா இறந்த நேரத்தில், தங்களுடைய அனுமதியில்லாமல் முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததில், பிரதமருக்கு உடன்பாடில்லை. அதனால்தான், அவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததை ஆளுநர் அலுவலகம் உடனே வாங்கிக் கொண்டது.
ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால்
அவர் ராஜினாமா செய்யாமல் சட்டசபையில் பலத்தைக் காட்ட நினைத்திருந்தால், அதிமுக எம்.எல்.ஏக்களும் அவருக்குத்தான் வாக்கு செலுத்தியிருப்பார்கள். ஏனென்றால், ஆட்சி கவிழ்வதை எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள். இதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருப்பதைக் காட்டியதால், அவர்களை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதற்காக பா.ஜ.க முன்வைத்த நிபந்தனைகளையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார். அதேநேரம், காங்கிரஸ் மீது கூடுதல் பாசத்தைக் கொட்ட ஆரம்பித்தனர் கார்டனில் உள்ளவர்கள்.
பாசம் மாறியதால் வந்த வினை
சென்னையின் பிரதான சாலையில் இருக்கும் நடராசன் தம்பியின் வீட்டில் காங்கிரஸ் புள்ளிகள் கூட ஆரம்பித்தனர். பலநேரங்களில் திருநாவுக்கரசரை அங்கே பார்க்க முடிந்தது. இதை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் டெல்லிக்குக் குறிப்பெடுத்து அனுப்பினர். 'மோடியை எதிர்ப்பதன் மூலம் அகில இந்திய அளவில் ஆதரவு கிடைக்கும்' எனவும் கார்டனில் உள்ளவர்கள் எதிர்பார்த்தனர். இதனை பா.ஜ.க தலைமை ரசிக்கவில்லை. அதன் விளைவாகத்தான் தொடர் ரெய்டுகளும் தினகரன் கைதும் நடந்தன.
சேகர் ரெட்டியை வைத்து
சேகர் ரெட்டி விவகாரத்தை வைத்துக் கொண்டே அனைத்தையும் வழிக்குக் கொண்டு வந்தது பா.ஜ.க. வருமான வரித்துறையும் அதன் சகோதர நிறுவனமான அமலாக்கத்துறையும் அருண் ஜெட்லி மூலம் ஆட்டுவிக்கப்பட்டன. பா.ஜ.கவின் முயற்சிகளுக்குத் துணை போகாவிட்டால், சம்பாதித்த அனைத்தும் கை நழுவிடும் என்ற அச்சத்தில்தான், ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவிடம் சரண்டர் ஆனது எடப்பாடி பழனிசாமி அரசு.
எதிர்ப்பே இருக்கக் கூடாது
கட்சியிலும் ஆட்சியிலும் தற்போது சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இல்லை. எதிர்ப்பே இல்லாமல் புதிய குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என மோடி விரும்பினார். அதற்கான முன்னோட்டத்தை தமிழகத்தில் நிகழ்த்திக் காட்டிவிட்டார்" என்றார் விரிவாக.