மீனவர்கள் விடுதலை... இந்திய வரலாற்றில் மோடி ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்: பொன்னார்
சென்னை: இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு பெற வைத்து, விடுதலை அடையச் செய்திருப்பதன் மூலம் இந்திய வரலாற்றில் மோடி ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
கடந்த 2011ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப் பட்ட ஐந்து தமிழக மீனவர்களுக்கும், சமீபத்தில் தூக்கு தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், அவர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பொது மன்னிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப் பட்ட மீனவர்கள் நேற்று இந்தியா வந்தடைந்தனர்.
டெல்லி வந்தடைந்த அம்மீனவர்கள் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், அவர்கள் மோடியை சந்திக்காமல் தமிழகம் வந்துள்ளனர்.
இந்நிலையில், மீனவர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணம் கூறியுள்ளதாவது :-
மனிதாபிமான கடமை...
மனிதாபிமான அடிப்படையில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் செய்ய வேண்டிய கடமையை பிரதமர் மோடி செய்து இருக்கிறார். இது விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட செயல் அல்ல. அப்படி விளம்பரம் தேட வேண்டிய நிலை பா.ஜனதாவுக்கு இல்லை.
பிரதமரின் கடமை...
ஒவ்வொரு விசயத்திலும் நுணுக்கமான சில விசயங்கள் இருக்கும். அடிப்படையான எல்லா செயல்களுக்கும் விளக்கம் கேட்பது முறையாக இருக்காது. ஒரு பிரதமராக இருந்து நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை செய்து இருக்கிறார்.
அரசியல் நாடகமல்ல...
இதை அரசியல் நாடகம் என்று கூறி, அரசியல் நாடகம் ஆடிக்கொண்டிருப்பவர்களுக்கு இப்போது உண்மை புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய வரலாற்றில் மோடி ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
மோடி தான் காரணம்...
விடுதலையான மீனவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் உணர்ச்சி பெருக்குடன் ‘மரணத்தின் வாயில் வரை சென்ற எங்களை பிரதமர் மோடி மீட்டுவந்து எங்கள் உயிரை காப்பாற்றி மறுவாழ்வு கொடுத்துள்ளார். மோடியை தவிர யார் பேசினாலும் ராஜபக்சே கேட்டிருக்க மாட்டார்' என்றார்கள்.
சரித்திர நிகழ்வு...
பிரதமர் அலுவலகமும், வெளியுறவுத்துறையும் எடுத்த தொடர் முயற்சியால் இந்த சரித்திர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதற்காக தமிழக மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.