ஜெ. மரணம்.. மோடிகிட்டயும் விசாரிக்கணுமே... தங்க தமிழ்ச்செல்வன் ஷாக் பேச்சு!
ஜெயலலிதாவின் மரணம் பற்றி பிரதமர் மோடியிடம் விசாரிக்க வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் அதிரடியாக கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றால் நீதிவிசாரணை நடத்த வேண்டும். அப்போது பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தடாலடியாக அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஓபிஎஸ் அணியினருக்கு என்ன டிமாண்ட் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு தேவை ஜெயலலிதா ஆட்சி. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் அதைத்தான் விரும்புகிறோம். துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கட்சியும் ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பி விலகிவிட்டார்.
சத்தியமாக ஜெயலலிதா மீது ஆணையிட்டு சொல்கிறேன் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். 60 நாட்கள் முதல்வராக இருந்த ஓபிஎஸ் விசாரிக்கப்பட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தார்கள். அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
எய்ம்ஸ் மத்திய அரசின் மருத்துவமனையும் கூட. மத்திய அரசையும் விசாரணைக்கு கூப்பிடுவீர்களா? ஓபிஎஸ்ஸை விசாரணைக்க கூப்பிட வேண்டும். லண்டன் டாக்டரை விசாரணைக்கு கூப்பிட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவர்களை விசாரணைக்கு கூப்பிட வேண்டும். சிங்கப்பூர் டாக்டரை விசாரணைக்கு கூப்பிட வேண்டும். மோடியை விசாரணைக்கு கூப்பிடுங்கள்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். மர்மம் மர்மம் என்று எத்தனை நாட்களுக்கு சொல்வீர்கள். 60 நாட்கள் முதல்வராக இருக்கும் போது மர்மம் தெரியவில்லை. இப்போது மட்டும் மர்மம் தெரிகிறதா? இது நியாயம் இல்லை என்று தங்க தமிழ்ச் செல்வன் கூறினார்.