பிரதமர் மோடி வருகைக்கு முன்னோட்டமாக ஆளுநர் வித்யாசகர் ராவின் அப்பல்லோ விசிட்?
சென்னை: பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளதால் பிரதமர் மோடி சென்னை வருவது உறுதி என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
அப்பல்லோ மருத்துவமனையில் 1 மாதமாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ், மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் சென்னைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்கக் கூடும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மருத்துவர்களிடம் ஜெயலலிதா பேசுவதாகவும் அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறிவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடநலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு வித்யாசகர் ராவ் மீண்டும் வந்து சென்றதே பிரதமர் மோடி வருகைக்காக முன்னோட்டம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
பிரதமர் மோடி வருகை தொடர்பாகவும் அப்பல்லோ மருத்துவர்களிடமும் வித்யாசகர் ராவ் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் பிரதமர் மோடியின் சென்னை பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.