எங்களுக்கும்தான் தாகம்.. கொஞ்சம் தண்ணீ குடிக்க குரங்குகளின் நிறைய அட்டகாசம்: வீடியோ
சுட்டெரிக்கும் வெயில் குரங்குகளுக்கு தாகம் எடுக்காதா என்ன? கொஞ்சம் தண்ணீர் குடிக்க அவை செய்யும் அட்டகாசம் சற்று அதிகம்தான்.
ஒசூர்; ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்களில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து தாகத்தை தீர்க்க குரங்குகள் படாதபாடு பட்ட வீடியோ காட்சிகள் இதோ உங்களுக்காக...
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இந்தத் தேர்வில் சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
மாவட்டந்தோறும் நடைபெற்ற இந்தத் தேர்வு ஒசூரிலும் நடைபெற்றது. அங்கு ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்தவர்கள் தங்களது 2 சக்கர வாகனங்களை தேர்வு மையத்தின் வெளியே நிறுத்திவிட்டு தேர்வு அறைக்கு சென்றனர். அவர்கள் தேர்வு எழுதிவிட்டு வருவதற்குள் அங்கிருந்து குரங்குகள் அவர்களது வாகனத்தை ஒருவழி செய்துவிட்டது.
ஒவ்வொரு 2 சக்கர வாகனமாக தாவிய குரங்குகள் அதில் உள்ள பக்கவாட்டு பைகளில் ஏதாவது இருக்கிறதா என்று தோண்டித் துருவி எடுத்து உண்டது. எதுவும் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாகனத்தை நோக்கி எகிறியது. அந்த வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து திறக்க முயற்சி செய்கிறது. அதனால் திறக்க முடியாமல் பாட்டில் கிழே விழுகிறது. அதனை எடுத்து மீண்டும் திறக்க முயற்சிக்கிறது.
இப்படி அந்த தேர்வு மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் ஒரு வழி செய்துவிட்டன அங்கிருந்த குரங்குகள். அந்த அட்டகாசங்கள் கொஞ்சம் ஒன்இந்தியா வாசகர்களுக்காக இங்கே வழங்கப்பட்டுள்ளது.