இளைஞர்கள், மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு - எடப்பாடி பழனிச்சாமி
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
சென்னை: வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு தோல்வியடைந்த மாணவர்களுக்கான உதவித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்த இடத்தில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து 5 கோப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் கையெழுத்திட்ட கோப்புகள் குறித்து விளக்கினார். அதன்படி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மாதந்திர உதவித்தொகை 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாதவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கான உதவித்தொகையும் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி உதவித்தொகை 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 31 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.