"ஜித்து ஜில்லாடி.. கலரு பிரியாணி".... கலகலக்கும் தேர்தல் திருவிழா... கல்லா கட்டும் வியாபாரிகள்!!
சென்னை: கல்யாணம் என்றால் கமகம விருந்து.. காது குத்து என்றால் கிடா வெட்டு என்பது சம்பிரதாயமாகி விட்டது. அதேபோல தேர்தல் என்றால் பிரியாணி விருந்து தடபுடலாக அமர்க்களப்படும். இந்த தேர்தலிலும் பிரியாணிக்கு பயங்கர கிராக்கி நிலவி வருவதாக பிரியாணி தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளும் பிரியாணி விருந்து போட்டு தங்களது கட்சித் தொண்டர்களையும், கட்சிக் கூட்டங்களுக்கு வருவோரையும் அசத்த வேண்டிய நிலையில் உள்ளதால் பிரியாணி கடைக்காரர்களுக்கு தொடர்ந்து ஆர்டர்கள் வந்து குவிந்தபடி உள்ளதாம்.
தேர்தல் சமயத்தில் பிரியாணிக்கு நல்ல கிராக்கி இருப்பதால் இந்த சமயத்தில் மட்டும் பிரியாணி தயாரிப்பில் ஈபடுவோரும் அதிகரித்துள்ளனராம்.
குஸ்காவுக்கு நோ...
பெரும்பாலும் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணிக்குத்தான் அதிக அளவில் ஆர்டர்கள் குவியுமாம். வெறும் ரைஸ் மட்டும் அடங்கிய குஸ்காவை இப்போது யாரும் விரும்புவதில்லையாம்.
ஆர்டர்...
கட்சிக் கூட்டங்கள், பிரச்சாரப் பயணங்கள், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு பிரியாணி பார்சல்களை பெருமளவில் ஆர்டர் கொடுத்து வாங்குகின்றனராம் கட்சியினர்.
சைட் டிஷ்...
அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பிரியாணி பொட்டலங்களை அதிக அளவில் வாங்குகின்றனராம். இவற்றுக்கு கத்திரிக்காய் தொக்கு அல்லது ஊறுகாய் சைட் டிஷ்ஷாக கொடுக்கிறார்களாம்.
நல்ல லாபம்...
ஆயிரம் கிலோ சிக்கன் பிரியாணி விற்றால் கிட்டத்தட்ட ரூ. 80,000 வருமானம் கிடைக்கும். அதுவே மட்டன் பிரியாணி என்றால் ரூ. 1 லட்சம் கிடைக்கும் என்று கூறுகிறார் காசிம் என்ற பிரியாணி வியாபாரி.
பிரியாணி தான் பெஸ்ட்...
பிரியாணிக்கு ஏன் இவ்வளவு டிமாண்ட், அதுவும் இப்போது வெயில் காலமாக உள்ளதே என்று கேட்டால், கார்த்திக் என்ற பிரியாணி கடைக்காரர் கூறுகையில், "டேஸ்ட்தான் காரணம். எந்த சீசனிலும் சாப்பிடக் கூடிய டேஸ்ட் பிரியாணிக்கு மட்டும்தான் உண்டு, வெறும் தயிர் சாதம் மட்டும் இப்போது விரும்புவதில்லை" என்றார்
வெயிலும் காரணம்...
மேலும் அவர் கூறுகையில், "அடிக்கிற வெயிலில் எங்கு போய் உட்கார்ந்து சாம்பாரை சாதத்தில் ஊற்றி சாப்பிட முடியும். பிரியாணியாக இருந்தால், பொட்டலத்தைப் பிரித்தோமா, சாப்பிட்டோமா என்று போய்க் கொண்டிருக்கலாம்" என்றார்.
இழுத்தடிப்பு...
அதேசமயம், அரசியல் கட்சிகளுக்கு பிரியாணி விற்பது என்பது பெரிய தலைவலி என்றும் வியாபாரிகள் கூறுகிறார்கள். அனில் என்ற பிரியாணி வியாபாரி கூறுகையில், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரியாணி வாங்கினால் பணத்தைத் தர பெருமளவில் இழுத்தடிப்பார்கள் என்றார்.
அம்மாகிட்ட வாங்கிக்கப்பா...
அதிமுகவினர் அதை விட மோசமாம். பிரியாணியை வாங்கி விட்டு பணம் கேட்டால் போய் அம்மா கிட்ட வாங்கிக்கப்பா என்று கூறி அலைய விட்டு விடுவார்களாம். இருந்தாலும் சிரித்துப் பேசி நைச்சியமாக பணத்தை பெற்று விடுவார்களாம் வியாபாரிகள்.