தேமுதிகவில் வரிசையாய் விழும் விக்கெட்டுகள்... இன்றும் பலர் கட்சி தாவ ரெடியாம்!
சென்னை: தேமுதிக என்னும் கூட்டை விட்டு பல மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பறந்து விட்டனர். இன்னும் சில மாவட்ட செயலாளர்கள் பறக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயகாந்திடம் இருந்து விலக தயாராக உள்ளவர்கள் சந்திரகுமார் அணியினர் பேசிய திமுகவிற்கு இணைக்க முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக பக்கம் செல்லவும் சிலர் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவில் எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொள்கிறோம். பொதுக் கூட்டத்திற்கு, இப்போதைய நிலையில் 5 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கிறோம். இன்னும் 3 மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதன்பின், எத்தனை பேர் இணைவார்கள் என்பதை 2 நாட்களில் அறிவிப்போம் என்று போகும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார் சந்திரகுமார். எஸ்.ஆர். பார்த்தீபனும், தன் பங்குங்கு தேமுதிகவை கரைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு தே.மு.தி.க.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விலகி வருகிறார்கள். இதுவரையில் 19 மாவட்ட செயலாளர்கள், 25 மாநில நிர்வாகிகள் விலகி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளனர்.
கூட்டணி முடிவு பிடிக்காமல் வெளியேறிய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் 17ம்தேதி நடைபெறுகிறது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடக்கும் இணைப்பு விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க. அதிருப்தி நிர்வாகிகளை சேர்க்க சந்திரகுமார் குழுவினர் கூட்டம் நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர்.
விழும் விக்கெட்டுகள்
தே.மு.தி.க.வில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி தி.மு.க.வில் இணைந்து வருவதால் விஜயகாந்த் கடும் கோபத்தில் இருக்கிறார். பல மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் போன போது கூட அப்செட் ஆகாத விஜயகாந்த், பேராசிரியர் ரவீந்திரனின் கட்சித்தாவல் விஜயகாந்தை அப்செட் ஆக்கியுள்ளதாம்.
சமரச முயற்சி
நிர்வாகிகளை அழைத்து கூட்டம் போட்டு பேசியும் எந்த பலனும் அளிக்கவில்லை. தே.மு.தி.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியாளர்களுடன் தொடர்பில் தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பதால் எப்போது யார் கட்சியை விட்டு விலகி செல்வார்கள் என்று யூகிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விஜயகாந்த் நிர்வாகிகளை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு சமரச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சுதீஷ் பேச்சு
மாநிலப் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய இருவரும்தான் விஜயகாந்த்துடன் எந்த நேரமும் டிஸ்கசனில் இருக்கிறார்களாம். மனம் மாறி வேறு கட்சிக்கு தாவ தயாராக உள்ள மாவட்ட செயலாளர்களிடம் சுதீஷை பேசச்சொல்லியிருக்கிறாராம் விஜயகாந்த்.
கோபத்தில் நிர்வாகிகள்
சுதீஷ் நம்பரைப் பார்த்தாலே பலர் போனை எடுப்பதே இல்லையாம். சிலர் மட்டுமே பேசுகிறார்களாம். எல்லோரும் பணம் கொடுக்கவே இல்லை என்ற கோபத்திலேயே இருக்கிறார்களாம் இதை விஜயகாந்திடம் கூறி வருத்தப்பட்டாராம் சுதீஷ். அப்படித்தான் இருப்பாங்க. அதெல்லாம் சரி பண்ணிடலாம் என்று கூறினாராம் விஜயகாந்த்.
பலர் கட்சி தாவ தயார்
என்னதான் விஜயகாந்த் சமாதானத் தூது விட்டாலும் திமுகவிற்கு செல்பவர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.சென்னை மாவட்ட தே.மு.தி.க. செயலாளரில் ஒருவரான வி.என். ராஜன் தி.மு.க.வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த பேராசிரியர் கான்ஸ்தந்தின் ரவீந்திரன் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். மேலும் 4 மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வில் சேர தயாராக இருக்கிறார்களாம்.
ஐக்கியமாக முடிவு
சென்னையில் உள்ள தே.மு.தி.க. 4 மாவட்ட செயலாளர்களில் வட சென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ், தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன் ஆகியோர் ஏற்கனவே தி.மு.க.வில் இணைந்து விட்டனர். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து விஜயகாந்தினால் நீக்கப்பட்ட காமராஜ் அ.தி.மு.க.வில் சேருகிறார். செயலாளரும் தி.மு.க.வில் ஐக்கியம் ஆக திட்டமிட்டுள்ளாராம்.
ரகசிய பேச்சுவார்த்தை
இது தவிர திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ, வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ, மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ, ஆகியோர் தி.மு.க.வில் சேருகின்றனர். 4 நிர்வாகிகளும் மு.க.ஸ்டாலினை சில தினங்களுக்கு முன்பு ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனராம். சேலத்தில் நடக்கும் இணைப்பு விழா முடிந்த பின்னர் இவர்கள் 4 பேரும் தி.மு.க.வில் இணைவது குறித்த தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
காலியாகும் கூடாராம்
தே.மு.தி.க.வில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவதால் விஜயகாந்த் கோபமாக உள்ளாராம். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டி வருகின்றனராம். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே தேமுதிக கூடாராம் காலியாகி விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளாராம் விஜயகாந்த்.
தேமுதிகவின் எதிர்காலம்
வேறு கட்சிக்கு தாவியவர்களிடம் பேசும் தேமுதிகவினர், கட்சியில் இருக்கும் சிலரும் வேற எங்கும் போகமுடியாது அதனால இருக்கோம் என்று கூறி வருகின்றனராம். பழைய பன்னீர்செல்வமாக, கம்பீர கேப்டனாக எல்லாம் இனி விஜயகாந்தினால் செயல்படமுடியாது என்கின்றனர் கட்சியில் இருந்து விலகியவர்கள். அப்போ தேமுதிகவின் எதிர்காலம்?