இடியும் மின்னலுமாய் கொட்டும் கோடை மழை… 2 நாளைக்கு நீடிக்கும்…. சொல்வது ரமணன்
மதுரை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடியும், மின்னலுமாய் கோடைமழை வெளுத்து வாங்கியது. அந்தமான் தீவுப்பகுதி அருகே தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நீடித்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்குமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒருவாரகாலமாகவே தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம், ஆகிய பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. மழை நீடித்தால் குடிநீர் பிரச்சினை நீங்கும் என்று அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் சூறாவளியுடன் பெய்த கன மழையால் 5 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரியில் கொட்டிய மழை
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் 3 வது நாளாக நேற்றும் சாரல் மழை பெய்தது. தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் வெள்ளம்
சேலம் மாவட்டம் மேட்டூரில் நேற்றிரவு இடி மின்னலுடன் பரத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சிவகாசியில் தீ விபத்து
இதேபோல், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்றிர இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று மின்னல் தாக்கி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் தீயில் கருகின. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் அடங்கிய ரோலர்களும், இயந்திரங்களும் தப்பின.
குமரி, நெல்லையில் மழை
இதனிடையே கன்னியாகுமாரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் கான்கிரீட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் மழை நேரத்தில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. வாட்டி வதைக்கும் கோடை வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை நீடிக்கும்
இதனிடையே தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நீடித்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்குமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். மேலும் தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.