திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரிகளில் பாதி ஆசிரியர்கள் உரிய கல்வித் தகுதி இல்லாதவர்கள்!
சென்னை: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆசிரியர்களில் பாதிப் பேர் உரிய கல்வித் தகுதியுடன் இல்லாதவர்கள் என்ற அதி்ர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக்கழக மானியக் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் மொத்தம் 4240 ஆசிரியர்கள் பணியாற்றுவதாகவும், இதில் பாதிப் பேர் தேவையான கல்வித் தகுதியுடன் கூடியவர்கள் அல்ல என்றும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு யுஜிசி சார்பில் இதுதொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் பி.ஆர். கோபிநாதன் சமர்ப்பித்தார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் ஐ இளங்கோவன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக 2014ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக உரிய கல்வித் தகுதி இல்லாத ஆசிரியர்கள் பலர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
மேலும் அவரது மனுவில், மொத்தம் உள்ள 118 கல்லூரிகளில் 25 சதவீத உதவி பேராசிரியர்கள் மட்டுமே உரிய கல்வித் தகுதியுடன் கூடியவர்கள். மற்றவர்கள் உரிய கல்வித் தகுதியுடன் இல்லாதவர்கள்.
இவர்களின் நியமனம் தொடர்பாக யுஜிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவையும் யுஜிசி கண்டுகொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து யுஜிசி பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில் மொத்தம் உள்ள 4240 உதவிப் பேராசிரியர்களில் 2270 பேர் உரிய கல்வித் தகுதியுடன் இல்லாதவர்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து உரிய கல்வித் தகுதியுடன் இல்லாத இத்தனை பேரை எப்படி நியமித்தார்கள் என்று யுஜிசி வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த யுஜிசி வழக்கறிஞர், சுய நிதிக் கல்லூரிகளில்தான் பெருமளவிலான பிரச்சினை உள்ளது. அவர்களுக்கு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. அவர்கள் செப்டம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து நவம்பர் 26ம் தேதிக்கு வழக்கு விசாரணையை கோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டது.