வண்ண வாக்காளர் அடையாள அட்டைக்கு 1 லட்சம் வாக்காளர்கள் விண்ணப்பம் - ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இதுவரையில் 1 லட்சம் வாக்காளர்கள் வண்ண வாக்காளர் அட்டை கேட்டு விண்ணப்பித்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "தமிழகத்தில் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளின் வெளியேயும் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஜவுளிக்கடைகளில் வழங்கப்படும் பைகளில் மே 16 ஆம் தேதி வாக்குப்பதிவு தினம். மறக்காமல் வாக்களியுங்கள் என்ற வாசகம் ஜவுளிக் கடைக்காரர்களால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 25 ஆம் தேதி முதல் வருகிற 5 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 116 முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ளவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பின்னர் மத்திய நுண் பார்வையாளர்கள் தமிழகம் வருகிறார்கள்.
வாக்காளர் சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை கேட்டு இதுவரை ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 4 ஆயிரம் வண்ண அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மீதி அட்டைகளும் விரைவில் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.