ரணகளத்திலும் மதிமுகவுக்கு ஒரு கிளுகிளுப்பு.. ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்
சென்னை: இரு திராவிட கட்சிகளுடனும், தேர்தலில் கூட்டு கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்ததும், அக்கட்சியை சேர்ந்த சில, பல நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தனர். இதனால், மதிமுக சிக்கலில் சிக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக மதிமுகவிடம் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் (நேற்று), வியாழக்கிழமை தஞ்சை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலையில் ம.தி.மு.கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
வைகோ வருகை தந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார். இவ்வாறு அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.