ரஜினியின் பேச்சை நம்ப தமிழ் ரசிகர்கள் தயாரில்லையா? 'தட்ஸ்தமிழ்' வாக்கெடுப்பில் சுவாரசியம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சுக்களில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்பதை தட்ஸ்தமிழ் இணையதளத்தில் வாக்களித்த வாசகர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல நிரூபித்துவிட்டனர்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தின் காரணமாக பல மக்கள் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இப்படியெல்லாம் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகளை தாண்டி, தமிழக நடிகர்கள், நடிகைகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே மக்களிடம் எழுந்துள்ளது.
ரஜினி பற்றி செய்தி
ஆந்திராவில் வெள்ள சேதம் ஏற்பட்டபோது, உதவி செய்த தமிழ் நடிகர்கள், தமிழர்கள் பாதிக்கப்படும்போது உதவி செய்யவில்லை. ரஜினி உட்பட.. என்ற தலைப்பில், 'தட்ஸ்தமிழில்' செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து, ரஜினி கூறியதாக ஒரு செய்தி கசிய விடப்பட்டது.
ஏதாவது செய்யனுமாம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஏதாவது செய்யனும் என ரஜினி கூறியதாகவும், ஆனால் விளம்பரம் இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன. இது 'தட்ஸ்தமிழ்' உள்ளிட்ட சில மீடியாக்களில் செய்தியாக வெளியாகியும் உள்ளது.
வாக்கெடுப்பு
ரஜினியின் இந்த கூற்று உண்மைதானா, உண்மையிலேயே அவர் கூறினாலும், அதை செய்வாரா என்பது போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. மக்களின் நாடித்துடிப்பை அறிய 'தட்ஸ்தமிழ்' சார்பில், வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
மூன்று ஆப்ஷன்கள்
மழை.. பப்ளிசிட்டி இல்லாமல் மக்களுக்கு ஏதாவது பண்ணனும் என்று ரஜினி கூறியதாக வரும் செய்திகள்.. என்று கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 3 பதில்கள் தரப்பட்டன. 1) மக்களுக்காக உண்மையிலேயே கவலைப்பட்டு சொல்லியிருக்கார், 2) மலேசியாவில் இருந்து உடனே திரும்பி வேலையை ஆரம்பிக்கலாமே, 3)கேட்டு கேட்டு காதுல ரத்தம் வருது, என மூன்று ஆப்ஷன்கள் தரப்பட்டன.
முக்கால்வாசி பேர்
27ம் தேதி பகல் 2.30 மணி வரை 16,100 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 72 சதவீதம் பேர், கேட்டு கேட்டு காதுல ரத்தம் வருது.. என்ற 3வது ஆப்ஷனையே கிளிக் செய்து தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.
கொஞ்சம் பேர் நம்புறாங்க
20 சதவீதம் வாசகர்கள், முதலாவது ஆப்ஷனான, மக்களுக்காக உண்மையிலேயே கவலைப்பட்டு சொல்லியிருக்கார் என்பதை கிளிக் செய்துள்ளனர். 8 சதவீதம்பேர் மலேசியாவில் இருந்து உடனே திரும்பி வேலையை ஆரம்பிக்கலாமே என்ற ஆப்ஷனில் கிளிக் செய்துள்ளனர்.
நம்பிக்கை போச்சே எசமான்
இந்த வாக்கெடுப்பில் இருந்து தெரியவருவது, பெரும்பான்மையான அதுவும் கிட்டத்தட்ட முக்கால்வாசி மக்கள், ரஜினியின் பேச்சை துளிகூட நம்ப தயாராக இல்லை என்பதுதான். இதில் மலேசியாவில் இருந்து வர வேண்டியதுதானே என்ற ஆப்ஷனுக்கு ஓட்டுபோட்டவர்களில் பாதிபேர் நம்பி அந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்திருக்கலாம், பாதி பேர், 'வந்தா பார்ப்போம்..' என்ற தொனியில் வாக்களித்திருக்கலாம் என்பதே நிதர்சனம்.
கபாலியை டிரெண்ட் செய்தனர்
ரஜினியின் சினிமா வாழ்க்கை வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்ற பக்குவம் தமிழ் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளதை இந்த வாக்கெடுப்பு காட்டுகிறது. ஏனெனில் கபாலி திரைப்பட முதல் லுக் வந்தபோது, அதை பார்க்க அருமையாக இருந்ததால், அதை டிவிட்டரில் டிரெண்ட் செய்த இதே நெட்டிசன்கள்தான், இப்போது, ரஜினியின் பேச்சை நம்ப தயாராக இல்லை என்பதும் தெரிகிறது.
வார்த்தை தவறிவிட்டார்
ஜெயலலிதா குறித்த ரஜினியின் கருத்தாக இருக்கட்டும், நதிநீர் இணைப்பு பற்றிய கருத்தாக இருக்கட்டும், இப்படி பல்வேறு விஷயங்களில் ரஜினியின் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டுள்ளது. மேலும், தனது சினிமா படங்கள் வெளிவரும் காலகட்டங்களில்தான் அவர் வெளியுலகில் பரபரப்பாக எதையாவது கிளப்பிவிடுகிறார் என்ற கணிப்பும் ரசிகர்களுடையது. இவையெல்லாம் இந்த வாக்கெடுப்பு கூறும் உண்மைகள்.