நீட் அவலம்.. மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்காதோ என அச்சம்.. வேலூரில் தாய் தற்கொலை!
தன்னுடைய மகளை மருத்துவராக்க முடியாதோ என்ற குழப்பத்தில் வேலூரில் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்காதோ என்ற அச்சத்தில் வேலூரில் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா இல்லையா என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்ததையடுத்து, நாளை முதல் நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் கூறி வந்தனர்.
மேலும் நீட் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் பெற்றோருக்கு சிக்கல் என்றும் கல்வியாளர்கள் கூறினர். இதற்கு ஏற்றாற் போல வேலூரில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாயார் சோகம்
வேலூர் அருகே பாகாயம் அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவருடைய மனைவி நித்யலட்சுமி கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களது மகள் அபிதா மதி பிளஸ் 2 முடித்துவிட்டு மருத்துவ சேர்க்கைக்காக காத்திருக்கிறார்.
எம்பிபிஎஸ் சேர்க்கையில் சிக்கல்
நித்யலட்சுமிக்கு தனது மகள் அபிதாமதியை மருத்துவராக்க வேண்டும் என்பது நெடுங்கால கனவாக இருந்தது. இந்நிலையில், அபிதாமதி +2 தேர்வில் 1124 மதிப்பெண்ணும், நீட் பொது நுழைவுத்தேர்வில் 224 மதிப்பெண்ணும் எடுத்திருந்தார். மதிப்பெண் குறைவாக எடுத்திருந்ததால், மருத்துவராக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டாக்டராக்க முடியாத ஏக்கம்
தனியார் மருத்துவக்கல்லூரியில் அபிதாமதியை சேர்க்க அவரது குடும்பத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் வாக்குவாதமாக மாறியதில் நித்யலட்சுமி மனமுடைந்ததாக கூறப்படுகிறது. தனது குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, ஞாயிறு அன்று வீட்டில் இருந்த தாய் நித்ய லட்சுமி மகள் டாக்டராகவே முடியாது.
விரக்தியில் தற்கொலை
அவரது ஆசை கனவாகவே போய் விட்டதாக நினைத்து வருந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பாகாயம் போலீசார் வழக்குபதிவு நடத்திய விசாரணையில் மகளை மருத்துவராக்கமுடியாததே காரணம் என்று தெரியவந்துள்ளது.