சொத்து தகராறில் தாய் வெட்டி கொலை... மகனை கைது செய்து போலீசார் விசாரணை
செங்கோட்டை : சொத்து தகராறில் பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவத்தையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஸ்வநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் 58 வயதான கிருஷ்ணன். விவசாயியான இவருக்கு பாப்பா என்ற மனைவியும் , 28 வயதான கோபால், 24 வயதான வேல்முருகன் கலா என்ற மகளும் உள்ளனர்.
பாப்பா தனது கிருஷ்ணனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும் அப்பகுதியை சார்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாப்பாவுக்கு சொந்தமாக ஒருவீடு உள்ளது. அந்த வீட்டை அவரது மகன் வேல்முருகன் தனது பெயருக்கு மாற்றி தருமாறு கேட்டு வந்துள்ளார். இதன் காரணமாக தாய்க்கும், மகனுக்கும் ஏற்கனவே பகை இருந்து வந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று (வியாழன்) காலையும் தாய்க்கும், மதுபோதையில் இருந்த மகனுக்கும் மோதல் ஏற்ப்பட்டுள்ளது.ஆனால் வேல்முருகன் சொல்வதை கண்டுக்கொள்ளாமல் பாப்பா விவசாய வேலைக்கு சென்றுவிட்டார்.
தாயின் மீது கோபத்தோடு மது போதையில் இருந்த வேல்முருகன், தாய் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தாயை வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை ஆய்வாளர் பொறுப்பு ஜமால் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, ஜெயசங்கர், சிக்கந்தர்.மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது வேல்முருகன் அந்தப் பகுதியில் நின்றிருந்தார்.
அவரை போலீசார் விரட்டிபிடிக்க முயன்றனர். அவர் போலீசாரை மிரட்டிவிட்டு தப்பி ஓடியபோது, போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.