மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு உடல் சென்னை வந்தது!
சென்னை: ஆண்டஸ் மலைத் தொடரில் உயிரிழந்த மலையேற்ற வீரரான ஆந்திராவைச் சேர்ந்த மல்லி மஸ்தான் பாபுவின் உடல் இன்று சென்னைக்கு வந்தது. அவரது உடல் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.
உலகின் உயரமான சிகரங்களை 172 நாட்களில் ஏறியவர் என்ற சாதனையைப் படைத்தவர் மஸ்தான் பாபு. கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி அர்ஜெண்டினா மற்றும் சிலி எல்லையில் அமைந்துள்ள ஆண்டஸ் மலைத்தொடரில் மலை ஏறுவதற்காக சென்றார்.
ஆனால் அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் 11 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் கிடந்த இடம் கடந்த ஏப்ரல் 3-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பாபுவின் அக்கா மல்லி டோரசன்னம்மா அர்ஜெண்டினா சென்று பாபுவின் பிரேதத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 13-ந் தேதி அவரது உடல், பனி படர்ந்த மலையில் இருந்து பாதுகாப்பாக கீழிறக்கப்பட்டு வடக்கு அர்ஜெண்டினாவின் துக்குமன் நகரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் செயற்கை ஊசி மூலமாக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
இங்கிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாபுவின் சொந்த கிராமமான காந்தி ஜன சங்கத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது.