போராட்டத்தை கைவிடுமாறு தம்பிதுரை வேண்டுகோள்.. விவசாயிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தல்
தமிழக விவசாயிகள் தொடர்ந்து வஞ்சித்து வருவதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் 7வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை கைவிடுமாறு லோக்
டெல்லி : கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் அருகில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.
வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் 7வது நாளாக இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக நதிநீர் இணைப்பு விவசாயிகள் நல சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் , பெண்கள் இப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் அரை நிர்வாண கோலத்திலும், நாமம் பூசிக் கொண்டும், எலும்புக் கூடுகளை கழுத்தில் மாட்டியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கண்டு கொள்ளாத பாஜக
தொடர்ந்து 7 நாட்களாக பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு பிரதிநிதிகள் யாரும் இன்று வரை சென்று பார்த்து அவர்களது கோரிக்கை குறித்து பேசவில்லை. போலீஸ்காரர்கள்தான் அவர்களிடம் தொடர்ந்து பேசி இடத்தை காலி செய்யுமாறு கேட்கின்றனர்.
தொடர் போராட்டம்
இந்நிலையில், முன் வைத்த காலை பின் வைப்பதில்லை என்ற கோஷத்தோடு விவசாயிகள் யாரும் அந்த இடத்தை விட்டு அகலாமல் கட்டிய வேட்டியை தரையில் விரித்து படுத்து ஒரு பிச்சைக்காரர்கள் போல் உண்ண உணவின்றி தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தம்பிதுரை வேண்டுகோள்
இந்நிலையில், லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை போராட்டக்காரர்களை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார். விவசாயிகளின் போராட்டம் குறித்து உரிய வகையில் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
அமைச்சர்களுடன் சந்திப்பு
மேலும், போராடும் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்திக்க நாளை ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் தம்பிதுரை வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து, போராடும் விவசாயிகள் நாளை மத்திய அமைச்சர்களை சந்தித்து நேரில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக விவசாயிகள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.