விவசாயிகள் குறித்துக் கவலைப்படாத வெங்கையா.. இளையராஜா விவகாரத்தில் தலையிடுவது ஏன்?
எஸ்பிபிக்கு இளையராஜா காப்பிரைட் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இப்போது அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டது. அதாவது அரசியல்வாதிகள் கைக்கு!
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இதுகுறித்துப் பேச ஆரம்பித்துள்ளார். "இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடுவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. இந்த விவகாரம் நல்ல விதமாக சரி செய்யப்பட வேண்டும்!" என்று அவர் கூறியுள்ளார்.
இது உடனடி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. எஸ்பிபியின் பூர்வீகம் தெலுங்கு என்பதால், இதில் வெங்கய்யா நாயுடு தலையிட ஆரம்பித்திருக்கிறார் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள் (ஆனா கெரகம்... கூடப் பிறந்த கங்கை அமரனே இளையராஜாவுக்கு பள்ளம் பறித்துக் கொண்டிருக்கிறார்!).
இது இரு பெரும் கலைஞர்களுக்கிடையிலான சண்டையல்ல. வழக்கமான ஒரு நடைமுறையை வேண்டுமென்றே எஸ்பிபி ஊதிப் பெரிதாக்கியதன் விளைவு. அவர் இளையராஜாவை போனில் அழைத்து விஷயத்தைச் சொல்லியிருந்தால் விஷயம் முடிந்திருக்கக் கூடும். ராஜாவின் நிகழ்ச்சியில் பாட ரூ 20 லட்சம் கேட்டிருக்கிறார் எஸ்பிபி. அது தரப்படாததால் அவர் நிகழ்ச்சிக்குப் போகவில்லை. பண விஷயத்தில் எஸ்பிபியே இவ்வளவு கறாராக இருக்கும்போது, நாம் மட்டும் ஏன் விட வேண்டும் என தன் உரிமையைக் கேட்டிருக்கிறார் இசைஞானி. இவ்வளவுதான் விஷயம்.
நிச்சயமாக அடுத்த ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இந்த இசைக் கலைஞர்கள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை. மத்திய அமைச்சர் ஒருவர் தலையிட்டு பஞ்சாயத்து பண்ணும் அளவுக்கான விவகாரம் இல்லை இது.
'டெல்லியில் தமிழக விவசாயிகள், வெறும் கோவணத்துடன் பகலில் எரிக்கும் வெயிலிலும், இரவில் கொட்டும் பனியிலும் ரோட்டில் படுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்க துப்பில்லாத அமைச்சர்கள், சினிமாக்காரர்களின் பிரச்சினை என்றதும் வந்துட்டாங்க சொம்பைத் தூக்கிக்கிட்டு பஞ்சாயத்து பண்ண... ' என மக்கள் கோபத்தில் வெடிக்க ஆரம்பித்துள்ளனர்.