சென்னை பறக்கும் ரயில் பெட்டி திடீரென தடம்புரண்டு விபத்து- பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்!
சென்னை: சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே பறக்கும் ரயில் பெட்டி திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில். இதில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் இருந்து பூங்கநாகர் வரை தரைமார்க்கமாவும் அதன் பின்னர் வேளச்சேரி வரை உயர் மட்ட தண்டவாளம் மீதும் ரயில்கள் செல்வதால் பறக்கும் ரயில் என அழைக்கப்படுகிறது.
சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையைப் போலவே கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையும் தென்சென்னைவாசிகளுக்கு மிக முக்கியமான ஒன்று.
இந்த மார்க்கத்தில் இன்று பிற்பகல் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே ரயில் பெட்டி ஒன்றின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் தடம் புரண்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். இந்த விபத்தால் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
மேலும் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையேயான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.