விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தீவிரவாதிகளா?: மக்களிடம் பீதி கிளப்ப வேண்டாம்- விஜயகாந்த்
சென்னை: முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலை புலிகளின் ஆதரவு இயக்கங்களால் முல்லை பெரியாறு அணை தகர்க்கப்படும் என்றும், இதற்காக மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தீவிரவாதிகளாக சித்தரிப்பு
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சொல்லியிருப்பது தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கரும் புள்ளி. பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்பதைப்போல இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டவர்களை தீவிரவாதிகள் என சித்தரித்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற செயலில் ஈடுபடும் அமைப்பினுடைய பெயரை தமிழக அரசால் வெளியிடமுடியுமா.
தமிழர்களுக்கு துரோகம்
பெரியாறு அணை பிரச்சனையில் வெற்றி பெற்றதாக கூறிக்கொண்டு, விவசாயிகளின் பெயரில் பாரட்டு விழாவை நடத்திக் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டையே கொச்சைபடுத்தும் வகையில், மத்திய புலனாய்வு துறையின் ஆய்வு அறிக்கையை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழர்களுக்கு செய்துள்ள துரோகம்.
சுமூக தீர்வு காணுங்கள்
முதல்வர் ஜெயலலிதா இது போன்று மக்களை பீதிக்கு உள்ளாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக்கொண்டு, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாத அச்சுறுத்தல்
மத்திய புலனாய்வுத்துறை ஆய்வு அறிக்கையில் முல்லைப்பெரியாறு அணையை குறிப்பிட்டு எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை என்று கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி கூறியுள்ளார். ஆனால் தமிழக அரசு இதுபோன்று மக்களை பீதிக்குள்ளாக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.