முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 136 அடியாக உயர்வு – பென்னிகுயிக் சிலைக்கு மதுரை மக்கள் மரியாதை!
மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்ததை அடுத்து மதுரையில் அவ்வணையைக் கட்டிய பென்னிகுயிக் சிலைக்கு விவசாயிகள் பொங்கல் வைத்து நன்றி செலுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 136 அடியை எட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது அணையில் நீர் மட்டம் 136.30 அடி உள்ளது. இதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் குடிநீர் தேவை மற்றும் விவசாயப் பணிகளுக்கு நீர் தட்டுப்பாடு நிலவாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதனால், மதுரை, தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள பென்னிகுயிக் சிலை முன்பு பொங்கல் வைத்து பொது மக்கள் நன்றி செலுத்தினர். மேலும் சாலைக்கு வெளியே நின்ற, சென்ற மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரிட்டிஷ் இந்தியாவில் தென் மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர்த் தேவையைக் கருதி, தனி மனிதராக நின்று இந்த அணையைக் கட்டி முடித்தவர் பென்னி குயிக். இந்த அணையைக் கட்டும் பணியை அரசு கைவிட்டபோது, பிரிட்டனிலிருந்த தனது சொத்துகள், மனைவியின் நகைகளையெல்லாம் விற்று பணம் திரட்டி இந்த அணையைக் கட்டி முடித்தார் பென்னி குயிக்.
இதனால் அவரை தெய்வமாகவே வழிபடும் தென் மாவட்ட மக்கள், பொங்கல் போன்ற தமிழரின் விசேஷ நாட்களிலும் பென்னி குயிக்குக்கு பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.