36 ஆண்டுகளுக்குப் பின் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டியது
தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 36ஆண்டுகளுக்கு 136 அடியை தாண்டியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்தசில நாட்களாகவே வெகுவாக உயர்ந்து வந்தது. இன்று 136 அடியை எட்டியது.
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 136 அடியை தாண்டிவிட்ட நிலையில் விரைவில் 142 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணை
தமிழக, கேரள எல்லையில் முல்லை பெரியாறு அமைந்துள்ளது. 152 நீர் மட்ட உயரமுடைய அணையில், கேரளாவின் நிபந்தனையால் 136 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது.
142 அடி தேக்க உத்தரவு
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மே மாதம் 142 அடி வரை தேக்க தீர்ப்பளித்தது. இதனை அமலாக்க கண்காணிப்பு குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. அணையில் 142 அடி வரை தேக்க வசதியாக ஏற்கனவே 13 ஷட்டர்களும் இறக்கி தயார் நிலையில் உள்ளன.
நீர் வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில், தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
136 அடியை எட்டியது
புதன்கிழமை 134.70 அடியாக இருந்த அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 135.30 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 2,957 கன அடி நீர்வரத்து இருந்தது. 456 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த நிலையில் அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. மேலும், பருவமழை சீசன் நவம்பர், டிசம்பர் வரை நீடித்தால் 142 அடி வரை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மேற்பார்வை
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படுவதை கண்காணிக்க இருமாநில அதிகாரிகள் அடக்கிய மேற்பார்வைக்குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த அதிகாரிகள் நேற்றைய தினம் அணையை பார்வையிட்டனர்.
அதிகாரிகள் அறிக்கை
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் 136 அடியை தாண்டியுள்ளது. இதனையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணையின் மேற்பார்வைக்குழுவுக்கும், தமிழக அரசுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளனர்.