36 ஆண்டுகளுக்குப் பின் 142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை: பட்டாசு வெடித்த விவசாயிகள்
தேனி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.
36 ஆண்டுகளுக்குப் பின் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டிருப்பதை தேனி மாவட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முல்லைப்பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நீர்மட்டம் 136 அடியை தாண்டியநிலையில், 20 நாட்களுக்குப் பிறகு நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்துள்ளது.
இத்தகவலை உறுதிசெய்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், சரியாக அதிகாலை 2.30 மணியளவில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததாக தெரிவித்தனர். அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 400 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாகவும் அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் பொதுப்பணித்துளை அதிகாரிகள் கூறினர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததையடுத்து, 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு இடுக்கி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.