திருவாரூர் கூட்டத்தைக் கலக்கிய எடப்பாடியாரின் பூனை - முனிவர் கதை.. யாருக்கு??!!
திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பூனை முனிவர் கதை சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
திருவாரூர்: அதிமுகவின் வலிமை எப்படிப்பட்டது என்று திருவாரூரில் பூனை முனிவர் கதை சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான சூழல் உருவாகியுள்ளது. பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் உற்சாகமாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
சாமானியர்களையும் சரித்திர நாயகர்களாக மாற்றும் வல்லமை படைத்தது அதிமுக என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை விளக்கும் வகையில் ஜெயலலிதா பாணியில் பூனை முனிவர் கதை ஒன்றை கூறினார்.
பூனை முனிவர் கதை
"ஒரு காட்டில் முனிவர் ஒருவர் வசித்து வந்தார். அவரது ஆசிரமத்தில் பூனையை வளர்ந்து வந்தது.
அந்த பூஜை காட்டில் உள்ள மிருகங்களை பார்த்து அஞ்சியது. எனவே தன்னை சிங்கமாக மாற்றிவிடுமாறு முனிவரிடம் கெஞ்சியது.
சிங்கமாக மாறிய பூஜை
முனிவரும் அந்த பூனையை சிங்கமாக மாற்றினார். காட்டில் சிங்கமாக உலாவந்த சிங்கமும், தன்னைப்போல பிற சிங்கங்கள் இருப்பதை பார்த்தது. சிங்கத்தை விட வலிமையான மிருகமாக தன்னை மாற்றுமாறு முனிவரிடம் மீண்டும் கேட்டுக்கொண்டது.
கொல்ல யோசித்த பூனை
உடனே சிங்கத்தை வல்லமை படைத்த சர்வம் மிருகமாக மாற்றினார் முனிவர். சர்வமாக மாறிய பூனையோ கம்பீரமாக சுற்றி வந்தது.
திடீரென்று அந்த பூனைக்கு கர்வம் தலைக்கு ஏறவே, தன்னைவிட வலிமையான மிருகத்தை முனிவர் உருவாக்கி விட்டால் என்ன செய்வது என்று யோசித்தது. உடனே முனிவரை கொன்று விடலாம் என்று நினைத்தது.
கெட்ட எண்ணம்
பூனையின் கெட்ட எண்ணத்தை உணர்ந்த முனிவர் பூனையிடம், உன்னை எப்படி மாற்றினாலும் நீ பூனையாகவே இருக்கிறாய் எனவே மீண்டும் உன்னை பூனையாகவே மாற்றுகிறேன் என்று கூறி பூனையாக்கினார்.
வாலை சுருட்டிய பூனை
பூனையும் வாலை சுருட்டிக்கொண்டு முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டது. இதில் வலிமை மிக்க முனிவர்தான் அதிமுக, அந்த பூனை யார் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் என்று கூறி நிறுத்தினார். அப்போது தொண்டர்கள் எழுப்பிய கை தட்டல் அடங்க வெகு நேரமானது.
பூனை யாராக இருக்கும் சசிகலாவா? டிடிவி தினகரனா? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர் அதிமுக தொண்டர்கள்.