முரசொலி பவளவிழா- சென்னையில் இன்று கொண்டாட்டம்- நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு
திமுக அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி பவள விழா காண்கிறது. இதற்காக சென்னை கோடம்பாக்கம் முரசொலி நாளிதழ் தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் விமர்சையாக செய்யப்பட்டுள்ளன.
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ அரசியல் நாளிதழ் முரசொலி. அதன் பவளவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.
கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கத்தை தி ஹிந்து குழுமத்தலைவர் என்.ராம் இன்று காலை 10 மணிக்குத் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக வீரமணி தலைமை வகிக்கிறார்.
இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பவளவிழா நிகழ்வில், கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன், தி ஹிந்து குழுமத் தலைவர் என்.ராம், தினத்தந்தி குழும அதிபர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கி.வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், டெக்கான் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், ஆனந்த விகடன் குழும மேலாண் இயக்குனர் பா.சீனிவாசன், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
விழாவில், முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் வரவேற்புரை ஆற்றுகிறார். முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறுகிறார்.
முரசொலி பவளவிழா கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.சி.எம்.ஏ. விளையாட்டு மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு பேராசியர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர். நல்லக்கண்ணு பவள விழா மலரை வெளியிட, முரசொலி முதல் மேலாளர் சி.டி. தட்சிணா மூர்த்தி பெறுகிறார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்வுகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.