கொலை செய்யப்பட்ட பெண் 13 ஆண்டுகள் கழித்து உயிருடன் வந்து கோர்ட்டில் ஆஜர்
மதுரை: 13 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட மேகலா என்கிற புனிதா உயிரோடு வந்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதி முன்பு ஆஜராகியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மேகலா என்கிற புனிதா கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி மாயமானதாகவும், அதே ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி முரப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து கோவில்பிள்ளை மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தான் புனிதா உயிருடன் திரும்பி வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் பேரூரில் வசித்து வந்த புனிதாவின் தாய் தனது கணவரை பிரிந்து சென்று திருப்பூரில் வேறு ஒருவரை மணந்து கொண்டார். திருப்பூரில் வசித்து வந்த புனிதாவின் தாய் சில ஆண்டுகள் கழித்து இறந்துவிட்டார். புனிதா திருப்பூரைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வசித்து வந்துள்ளார். அதன் பிறகு அவரைப் பிரிந்து சென்னைக்கு சென்றுவிட்டார்.
சென்னையில் முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்த புனிதா 2 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். 2011ம் ஆண்டில் தனது சொந்த ஊருக்கு சென்ற புனிதாவிடம் அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி போலீசார் 2 பேரை கைது செய்தது பற்றி தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி.யை சந்தித்து தன்னை யாரும் கொலை செய்யவில்லை என்று தெரிவித்தார்.
புனிதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரும் தங்கள் மீது பொய்யான வழக்கை பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புனிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி புனிதா நீதிமன்றத்தில் ஆஜரானார். புனிதாவுக்கு மரபணு பரிசோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, அவரின் தந்தையை வரவழைத்து இவர் புனிதா தானா என்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.