முடிந்தது தா.பாண்டியன் அத்தியாயம்... இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரானார் இரா.முத்தரசன்
கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரா. முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்துடன் தா.பாண்டியனின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
தமிழ் மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் இருந்து வந்தார். இந்த நிலையில், கட்சியின் 23வது மாநில மாநாடு கோவையில் நடந்தது. மாநிலச் செயலாளர் பதவிக்கு இரா.முத்தரசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சி.மகேந்திரன் போட்டியிட்டார்.
இதில், தா.பாண்டியன் இரா.முத்தரசனை மாநில செயலாளராக முன்மொழிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் வழிமொழிந்தார். இதையடுத்து இரா.முத்தரசன் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் முத்தரசன் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லகண்ணு, தா.பாண்டியன் என கடந்த பல வருடங்களாக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்து வந்த நிலையில் தற்போது தஞ்சைத் தரணியிலிருந்து முத்தரசன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.