விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுவதும் ரத்து செய்ய வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்
விவசாயிகளின் பயிர்க்கடனை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்துள்ளது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இன்று அறிக்கையை சமர்பித்தனர்.
இதனையடுத்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என்று கூறி வாரணத் தொகையும் அறிவித்துள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இது குறித்து அரசியல் கட்சித்தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் முத்தரசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தொகை விவசாயிகளுக்கு போதுமானதல்ல என்று கூறியுள்ளார். எதன் அடிப்படையில் இந்த நிவாரணத்தொகை அறிவித்தார்கள் என்றும் தெரியவில்லை என்று கூறினார்.
பயிர் பாதிப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஏமாற்று வேலையே என்று நினைக்கத் தோன்றுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் மட்டுமே மரணமடைந்ததாக கூறி அவர்களுக்கு ரூ. 3 லட்சம் மட்டுமே நிவாரணத் தொகை அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் அவநம்பிக்கையில் இருக்கின்றனர். கடன்களை சுமந்து கொண்டே இருக்க வேண்டுமா? பயிர்கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.