ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
டெல்லியில் மர்மமான மரணமடைந்த மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்குப் பிறகு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை: டெல்லியில் மரணமடைந்த ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கல்வி பயின்று வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் இரு தினங்களுக்கு முன்பு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மரணத்தில் சந்தேகம்
முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதன்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவர்கள் 5 பேர் மற்றும் முத்துக்கிருஷ்ணனின் தந்தை தரப்பு மருத்துவரும் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இதில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை முத்துக்கிருஷ்ணனின் பெற்றோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில் முத்துக்கிருஷ்ணனின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
அமைச்சருக்கு எதிர்ப்பு
அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சொந்த ஊரில் இறுதி அஞ்சலி
இதனையடுத்து சாலை வழியாக முத்துகிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் அரிசிபாளையத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தது. சொந்த ஊரில் முத்துக்கிருஷ்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது.
உடல் அடக்கம்
குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் முத்துக்கிருஷ்ணன் உடல் செவ்வாய் பேட்டை மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மாணவன் உடல் வருகையையொட்டி உதவி கமிஷனர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.