கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டி முத்தரையர்கள் உண்ணாவிரதம்
புதுக்கோட்டை: கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் இடஒதுக்கீடு வேண்டி முத்தரையர்கள் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
முத்தரையர் சமுதாயத்திற்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி கொடுக்கவில்லை.
இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முத்தரையர் அமைப்பினர் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதி மன்றம் போராட்டத்திற்கு அனுமதி அளித்தது. இதனை அடுத்து புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழத்தின் பல பகுதிகளில் இருந்து முத்தரையர் சமூதாயத்தினர் வந்திருந்தனர். தீவிர வாகனச் சோதனைக்கு பின்னரே வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கபட்டன. உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வலியுறுத்தினர்.