அரசியலுக்கு வருவது என்பது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்ததே... கமல்ஹாசன்
அரசியலுக்கு நான் வருவது என்பது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்தே அமையும் என்று நடிகர் கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நான் வருவது என்பது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்தே அமையும் என்று நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து தந்தி டிவிக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:
ஒரு கட்சி ஆரம்பிக்க எவ்வளவு ரூபாய் வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். ஆனால், இப்போதுள்ள நிலையில், நேர்மையாக வெள்ளைப் பணத்தை வாங்கி அரசியல் செய்யலாம் போல் இருக்கிறது. பண்ண வாய்ப்பு உண்டு.
யாரும் அரசியலுக்கு வரலாம்
அதனால், நான் அரசியலுக்கு வருவேனா? என்று கேட்காதீர்கள். இந்த மாதிரி பிரச்சினை வந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
படிக்காமல் வந்த தலைவர்கள்..
எனக்கு என்னவென்றால், என்ஜினீயரிங் படித்த ஒருவர் பொதுப்பணித்துறை அமைச்சராக வர வேண்டும். சட்டம் முழுமையாக படித்த ஒருவர் சட்டத்துறை அமைச்சராக வர வேண்டும். அப்படி வந்தால், கண்டிப்பாக அந்தத் துறை முன்னேறும். படிக்காமல் வந்தவர் தான் கலைஞர். படிக்காமல் வந்தவர் தான் சிவாஜி கணேசன். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனை விட 30 வகுப்பு அதிகமாக படித்துவிட்டாரா என்ன?. 4, 5 வகுப்புகள் அதிகமாக படித்திருப்பார்.
நிர்வாகிகள்தான் தேவை
இனிமேல் நாம் தேட வேண்டியது தலைவர்களை அல்ல. நிர்வாகிகளைத் தான் தேட வேண்டும். நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. வர வைத்துவிடாதீர்கள்.
அழுத்தத்தைப் பொறுத்தே
அரசியலுக்கும் வந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்துக்கு இன்னும் நான் வரவில்லை. அது நடைமுறைகளையும், சூழலையும், எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தையும் பொறுத்தது.
இவ்வாறு கமல்ஹாசன் தான் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.