தூத்துக்குடி என். பெரியசாமி மரணம்.. மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி மரியாதை
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். அவரது உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். தனியார் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தட்டார்மடத்தைச் சேர்ந்த பெரியசாமி திமுகவில் தொடர்ந்து 40 ஆண்டு காலம் செயல்பாட்டில் இருந்தவர். திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அவருக்கு நுரையீரல் தொடர்பான உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இதனை அடுத்து திமுக 3 நாள் துக்கம் அறிவித்துள்ளது. திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள என். பெரியசாமியின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி துர்கா, சகோதரி செல்வி ஆகியோரும் பெரியசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். திமுக மூத்த தலைவர் டி ஆர் பாலு நேரில் சென்று பெரியசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிகளில் வெற்றி பெற்று
இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். 30 ஆண்டு காலம் தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருந்து திமுகவின் வலிமைக்கு பாடுபாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.