'நாடா இயங்காது எனில் நாடே இயங்காது' ... ஜிஎஸ்டிக்கு எதிராக ஜவுளி உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்!
ஜவுளிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியை நீக்க வலியுறுத்தி விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சேலம்: ஜிஎஸ்டி வரிவிதிப்பில் ஜவுளிக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளதால் வரியை நீக்க வலியுறுத்தி விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்தியானது நடந்து வருகிறது. சுமார் ரூ.150 கோடி அளவில் நாள்தோறும் ஜவுளி உற்பத்தி நடைபெறுவதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை எனப்படும் ஜிஎஸ்டி வரி ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இதில் ஜவுளிக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம்
விசைத்தறி உரிமையாளர்கள் 5% வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் 3 நாள்களுக்கு, அதாவது 29-ஆம் தேதி வரை வேலைநிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் விசைத் தறியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 கோடி பேர்
இதுகுறித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழகத்தில் 25 லட்சம் விசைத்தறிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில் உள்ள நெசவு, டையிங், வாஷிங், பிரிண்டிங் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வரும் 1 கோடி பேர் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரி விதிப்பு அமலாகும்போது நிச்சயமாக ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும்.
அதிக விலை
சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இதுவரை ஜவுளிக்கு மிக குறைவாகவே விற்பனை செய்து வருகின்றது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் ஜவுளியை அதிக விலைக்கு கொடுக்கும் போது வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாக நேரிடும். எனவே ஜவுளி உற்பத்திக்கு 5% வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர். நாடா இயங்காது எனில் நாடே இயங்காது என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு பேட்ச்
3 நாள்கள் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், வருகிற 30-ஆம் தேதி ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி தொழிலாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் என அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.