"தமிழகத்தையே மாற்றுவோம்".. நாளை 234 வேட்பாளர்களையும் அறிவிக்கிறது நாம் தமிழர்
சென்னை: நாம் தமிழர் கட்சி தனது 234 வேட்பாளர்களையும் நாளை மக்களுக்கு அறிவித்து அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தத் தகவலை நாம் தமிழர் தலைவர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார். கடலூரில் நாளை மாலை இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
நடைபெறுகிறது.
வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் அது அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நாளை கடலூரில் நடைபெறவுள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.
கடலூரில் அறிமுகக் கூட்டம்
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், 234 தொகுதிகளுக்கும் நாளை வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவர். கடலூரில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும்
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி அதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
திமுக, அதிமுகவால் மாற்றம் வராது
அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளாலுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. அக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ள மற்ற அரசியல் கட்சிகளாலும் அது சாத்தியப்படாது. நாம் தமிழர் கட்சியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
எங்கள் நாட்டில் எங்கள் ஆட்சியே
எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே, தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தையே மாற்றுவோம் என்கிற முழக்கங்களுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம்.
மாற்றம் வரும்
நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். கடலூரில் நாளை நடக்கும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் தோன்றுகிறார்கள்.
மூணாறிலும் போட்டி
தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலம் மூணாறு சட்டசபைத் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது என்று கூறினார் சீமான்.