தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள்.. நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை!
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை, ‘ஆட்சி செயற்பாட்டு வரைவு' எனும் பெயரில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மக்கள் அனைத்து தேவைகளுக்காகவும் சென்னையில் குவிவதைத் தடுக்கும் வகையில் தமிழகத்திற்கு ஐந்து தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. ஏற்கனவே தங்களது வேட்பாளர்களையும் அக்கட்சி அறிவித்து விட்டது.
இந்நிலையில், இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். இந்தத் தேர்தல் அறிக்கையானது 314 பக்கங்களுடன், 49 உத்தேசத் திட்டங்களைக் கொண்டுள்ளது.
தலைநகரங்கள்...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் சீமான் பேசுகையில், ‘தமிழகத்தின் தலைநகரமானது செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்; சென்னையானது திரைக்கலை, துறைமுகம், கணினிநுட்பத் தலைநகராக இருக்கும்; தொழில், வர்த்தகத் தலைநகராக கோவை விளங்கும்; மொழி, கலை, பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும் தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் இருக்கும்' எனத் தெரிவித்தார்.
சென்னையில் குவியும் மக்கள்...
இதேபோல், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், கிராமங்களிலிருந்து சென்னைக்கு வருகிறார்கள்; இதனால் நகரம் பிதுங்கிவழிகிறது; உயிரைச் சுமந்துசெல்லும் அவசர ஊர்திகூட சரியான நேரத்துக்குச் செல்லமுடியவில்லை; இதனால் நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி ஆகியவை பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு ( வரும்போது) தலைநகரை மாற்றி அமைக்கும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பொறியாளர்...
மேலும் பத்தாண்டுப் பசுமைத் திட்டம் என சுற்றுச்சூழல், கழிவுமேலாண்மை பற்றியும், சணல்நார்ச் செடி என தனியாகவும் அறிக்கையில் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மைப்பணியில் ஈடுபடுவோரை தூய்மைப்பொறியாளர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பகுதியில், ‘ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சார்ந்தவர்களை மட்டும் தூய்மைப்பொறியாளராகப் பயன்படுத்திவரும் முறை தடை செய்யப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவிடம்...
அதோடு, சந்தனக்கடத்தல் வீரப்பன் இந்த அறிக்கையில் ‘தமிழர்களின் வனக்காவலர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். வீரப்பனுக்கும், இன விடுதலைக்குத் தன்னுயிரை தியாகம் செய்த அப்துல் ரவூஃப், முத்துக்குமார், செங்கொடி ஆகியோருக்கும் தனித்தனியே நினைவகம் அமைக்கப்படும் என நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராஜராஜசோழன் காலடியில்...
முன்னதாக நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் பெரியகோவில் அருகே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து, ராஜராஜசோழன் சிலையின் காலடியில் நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு அறிக்கையை வைத்து வணங்கியது குறிப்பிடத்தக்கது.