நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம்... வாழ்க்கை வரலாறு
நாம் தமிழர் கட்சியின் ஆர்கே நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கலைக்கோட்டுதயம்.
நாம் தமிழர் கட்சியின் சின்னமாக கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதே இரட்டை மெழுகுவர்த்திதான் இப்போதும் அக்கட்சிக்கு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமர் மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கட்டிமாங்கோடு கிராமத்தில் அமரர் காசி உதயம் - அன்னப்பழம் இணையருக்கு மகனாக பிறந்தவர்.
அவரது தந்தை காசி உதயம் தமிழ் தேசியவாதி. அதன்படி இளமைக் காலத்தில் இலங்கையில் வீரகேசரி இதழில் செய்தியாளராக பணியாற்றிய அவர், பின்னாளில் தமது பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காக தாயகம் திரும்பினார். தினமலர்; நாளிதழில் அவர் எழுதிய அய்யா வைகுந்தார் வரலாறு அனைவராலும் போற்றப்பட்ட தொடராகும். அத்தகைய குடுபத்திலிருந்து வந்த கலைக்கோட்டுதயமும் தந்தையைப் போலவே தமிழ் தேசியவாதியாக தன் அரசியல் பணியைத் தொடர்ந்தார்.
பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலும், கல்லூரிப் படிப்பை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியிலும் முடித்த கலைக்கோட்டுதயம், படிக்கும் காலத்திலேயே பகுதி நேர தொழில் செய்து தனது கல்விச் செலவுகளை தாமே பார்த்துக் கொண்டார்.
தமிழன் தொலைக்காட்சியை ஆரம்பித்து, கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
சமூக பணியில் முன்பு தமிழ் தேசியத்தை தாங்கி பிடித்த பாட்டாளி கட்சியோடும், பின்பு தமிழ்தேசியத்தோடு பயணித்த விடுதலை சிறுத்தைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.
தற்பொழுது நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.