உதயசூரியன், இரட்டை இலைக்கு ஓட்டு போடுறவங்க கையில் குஷ்டம் வரும்: சீமான் சாபம்
மதுரை: உதய சூரியன் மற்றும் இரட்டை இலையில் வாக்களித்தால் அவர்கள் கையில் குஷ்டம் வந்துவிடும் என்று மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் பெண் வேட்பாளர் சாராளை ஆதரித்து பேசிய சீமான், விவசாயம் செய்வதை கேவலம் என்று நினைக்கின்றனர் நமது மக்கள். ஆனால், அதுதான் நம்மை காப்பாற்றுகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் 2 ரூபாய்க்கு அரிசி போடுகிறார்கள் என்று ஓடி போய் வாங்குகிறோம். அதையும் குறைத்து ஒரு ரூபாயாக மாற்றினார்கள். அப்போது சென்றோம், இப்போது இலவசமாக மாற்றிவிட்டார்கள். இப்போதும் சென்று கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடிக்காது என்றார்.
வயலில் சென்று வேலை செய்ய பயப்படும் நாம், நாளை சோற்றிற்காக பயபடபோறோம். இன்று இலவசமாக போடும் இவர்கள் நாளை கண்டிப்பாக காப்பாற்ற மாட்டார்கள். கஜானா காலியானதும் ஓடிவிடுவார்கள்.
ரூ. 20 லட்சம்
ஜெயலலிதா கூட்டத்துக்கு போனவரிடம் கேட்டேன். எப்படி இருந்தது என்று. ஒரு முறை போனால் 200 ரூபாய். ஒரேடியா போனால் 20 லட்ச ரூபாய் என்றார். ஜெயலலிதா கட்சியில் இருப்பவர்கள் பல்லு விலக்குவதில்லை போல. அவர் கிட்ட போகும் போது வாயை பொத்திக்கொண்டே போகின்றனர்.
மது விலக்கு
படி படியா மது விலக்கு கொண்டுவர போறாங்களா. மாடில எதுவும் போய் கடைவைத்திருப்பாங்க போல, ஆனால், மதுவிற்கு அஸ்திவாரம் போட்டது கருணாநிதி தான். அந்த கள்ளச்சாவி திறந்ததுதான் டாஸ்மாக்.
விளை பொருளுக்கு விலை
ஒரு குண்டூசி செய்பவன் கூட தன் பொருளுக்கு தானே விலையை நிர்ணயம் செய்கிறான். ஆனால் வருடம் முழுவதும் உழைத்து ஓடாய் தேய்ந்த விவசாயி விளைய வைத்த பொருளுக்கு யாரோ விலையை நிர்ணயம் செய்கிறான். மிகவும் கொடுமையான விஷயம்.
விவசாயிகள் தற்கொலை
விவசாயிகள் தற்கொலை வெறும் செய்தி அல்ல, உலகம் சோறு, தண்ணி இல்லாமல் அழியப்போகிறது என்பதற்கு முன்னெச்சரிக்கை.
விஜய் மல்லையாவை பத்திரமாக அனுப்பிவிட்டு நாடகம் நடத்துகிறார்கள். பீர் கம்பெனி முதலாளிக்கு பல சலுகைகள் கொடுத்து பல கோடி கடன் கொடுத்து காப்பாற்றுகின்றனர். ஆனால் விவசாயிகள் வாங்கும் சொற்ப பணத்திற்கு அவர்களை கட்டிப்போட்டு அடித்து தற்கொலை செய்வதற்கு தூண்டுகின்றனர்.
அரசு ஊழியர்கள்
இந்தியாவிற்கு வேளாண்மை தொழில் அல்ல, அது அவனுடைய பண்பாடு. இனி மாற்றம் கிடைக்கப் போகிறது. தமிழ்நாடு இயற்கை விவசாயத்தில் கொடிகட்டி பறக்கப்போகிறது. குற்றங்கள் செய்தவருக்கு தண்டனை கொடுக்கும் முன் அவனை தவறு செய்யவிடாமல் தடுத்துக்காட்டுவோம். பல லட்சம் புதிய போலீஸ் நியமிக்கப்படும். அவர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான சம்பளம் கொடுக்கப்படும்.
சாபம் விட்ட சீமான்
விவசாயிகள் அனைவரும் அரசுப்பணியாளராக மாற்றப்படுவர். அதனால் அனைவரும் இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களிக்க வேண்டும். கலைஞர் கருணாநிதியே இந்த முறை இதற்கு தான் கை நடுக்கத்தில் வாக்களிக்கப் போகிறார். உதய சூரியன் மற்றும் இரட்டை இலையில் வாக்களித்தால் அவர்கள் கையில் குஷ்டம் வந்துவிடும் என்று கடைசியில் சாபம் விட்டார் சீமான்