3வது கட்டமாக 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த சீமான்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் குழுவில் 11 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
2வது கட்டமாக கடந்த வாரம் தியாகராய நகரில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் மேலும் 18 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு மயிலை மாங்கொல்லையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சிவாஜி கணேசன் நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சி தலைவர் சீமான் 3 ஆம் கட்டமாக மேலும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
வேளச்சேரி தொகுதி வேட்பாளராக வக்கீல் வடிவேலு, மயிலாப்பூர் தொகுதிக்கு ஸ்டாலின், ஆயிரம் விளக்குக்கு முருகேசன் ஆகியோரும், திரு.வி.க.நகர் தொகுதி வேட்பாளராக கவுரி, திருத்தணி தொகுதிக்கு பிரபு ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.