காரசாரமாய் சமைத்த மாட்டுக்கறி உண்டு போராட்டம்.. பொதுமக்களுக்கு வழங்கி நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு
மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதை கண்டித்து, காரசாரமாய் மாட்டிறைச்சி சமைத்து பொதுமக்களுக்கு வழங்கி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
இந்நிலையில், இன்று சென்னை வில்லிவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியினர் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டிறைச்சி வழங்கப்பட்டது.
ருசியான மாட்டுக்கறி வழங்கி..
ருசியாக, காரசாரமாக சமைக்கப்பட்ட மாட்டுக்கறி போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது. போராட்டத்தை காண வந்த பொதுமக்களுக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.
பெண்கள் பங்கேற்பு
இந்தப் போராட்டத்தில் பெண்கள் தங்கள் கைக் குழந்தைகளுடன் சென்று பங்கேற்றனர். மாட்டிறைச்சி தடைக்கு எதிரான பேனர்களை பிடித்து போராட்டத்தில் குழந்தைகள் ஈடுபட்டனர்.
எதிர் கோஷம்
போராட்டத்தில் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ள பாஜகவை கடுமையாக எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாட்டுக்கறியை போராட்டத்தில் வழங்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் விழித்தனர்.