பல கோடி ஊழல்.... சரத்குமார் மீது நடவடிக்கை தேவை.. கமிஷனரிடம் நடிகர் சங்கம் புகார்
சென்னை: முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மீது பலகோடி ரூபாய் ஊழல் செய்ததாக நடிகர் சங்கம் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளது.
நாசர் தலைமையிலான நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பலமுறை நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை கேட்டும், சரத்குமார் கணக்குகளை ஒப்படைக்க முன்வரவில்லை.
இந்நிலையில் இன்று அவர் மீது பலகோடி ரூபாய் ஊழல் புகாரை நடிகர் சங்கம் சென்னை கமிஷனரிடம் அளித்துள்ளது.
சரத்குமார்
கடந்த 2௦௦6 ம் ஆண்டு தொடங்கி 2015 வரை தொடர்ந்து 3 முறை நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் சரத்குமார். நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பாக எழுந்த பிரச்சினை சரத்குமாரின் பதவியைக் காலி செய்ய, தொடர்ந்து நாசர் தலைமையிலான அணி கடந்த ஆண்டு வென்று நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளைக் கைப்பற்றியது.
கணக்கு வழக்குகள்
புதிய நிர்வாகிகள் பதவியேற்று மாதங்கள் கடந்த பின்னரும் சரத்குமார் சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை. இது குறித்து பலமுறை நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்தும் கணக்குகளை ஒப்படைக்க சரத்குமார் முன்வரவில்லை.
சங்கக் கூட்டம்
நேற்று முன்தினம் நடந்த நடிகர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கணக்கு, வழக்குகளை ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
நடிகர் சங்க அறக்கட்டளை
இந்நிலையில் இன்று நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர் பூச்சி முருகன் ஆகியோர் சென்னை கமிஷனரை நேரில் சந்தித்து சரத்குமார் மீது ஊழல் புகார் அளித்துள்ளனர். சரத்குமார் மீது பலகோடி ரூபாய் ஊழல் புகார் நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.