ஏமனில் இருந்து தப்பி வந்த நர்ஸ்கள் கலெக்டரிம் மனு- வேலை வேண்டி விண்ணப்பம்
நாகர்கோவில்: ஏமனில் இருந்து தப்பி வந்த நர்ஸ்கள் கலெக்டரிம் வேலை கேட்டு மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏமனில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தற்போது அங்கு போர் மிகவும் தீவிரம் அடைந்து இருப்பதால் அங்கு நர்ஸ் மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்ற இந்தியர்கள் குண்டு மழைகளுக்கு நடுவில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தவித்து வருகிறார்கள்.
இவர்களை மீட்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஏராளமான இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஏமனில் இருந்து விமானம் மூலம் கொச்சி திரும்பியவர்களுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சொந்த ஊர் திரும்பினார்கள்.
இவர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த நர்ஸ் மற்றும் லேப் டெக்னீசியன்களாக ஏமனில் பணிபுரிந்த குலசேகரம் சந்திரசேகரன், பாலப்பள்ளம் ஜெபடானி, விரிகோடு நிஷா, கழுவன்திட்டை சவுமியா, இரவிபுதூர்கடை அமுதா உள்பட 25 பேர் இன்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானை சந்தித்து கண்ணீருடன் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தாங்கள் ஏமன் நாட்டில் நர்ஸ் மற்றும் லேப் டெக்னீசியன்களாக பணி புரிந்து வந்ததாகவும், அங்கு நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக தங்கள் உடமைகளை இழந்து சொந்த ஊர் திரும்பி உள்ளதாகவும், எனவே தாங்கள் கஷ்டம் நீங்க உள்ளூரில் மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
அவர்கள் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டரும் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.