எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய நக்மா
விழுப்புரம்: பலியான எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் பெற்றோரை சந்தித்து மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். கல்லூரியில் பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
அவர்கள் மூன்று பேரின் பின் மண்டையில் பலத்த காயம் இருந்ததால் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்று அவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக கல்லூரியின் தாளாளர் வாசுகியே போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
இந்த சூழலில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா அந்த 3 மாணவிகளின் மர்ம மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூருக்கு சென்று மாணவி சரண்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாணவிகள் பலியான விஷயத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்திற்கு பொறுப்பு உள்ளது. அந்த அமைச்சகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.