குடிக்க தண்ணீர் இல்லாத வேலூர் பெண்கள் சிறை… 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பெற்றுத் தந்த நளினி
வேலூர் பெண்கள் சிறையில் தண்ணீர் வசதி இல்லாததை எதிர்த்து 4 நாட்கள் நளினி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதன் பிறகு அங்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது.
வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில் தண்ணீர் வசதி இல்லாததால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் பெண்கள் சிறையில், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரி நளினி தொடர்ந்து 4 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார்.
போராட்டம் வதந்தியாம்..
இதுகுறித்த தகவல்கள் தெரிந்து சிறைத் துறையினரிடம் விசாரித்த போது, நளினி உண்ணாவிரதம் இருக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று வேலூர் பெண்கள் சிறைக்கு சென்று நளினியை சந்தித்து பேசினார்.
4 நாள் போராட்டம்
இதனைத் தொடர்ந்து புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது: நளினி சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவரை சந்தித்து பேச வந்தேன். இந்த சந்திப்பில் நளினி கடந்த வாரம் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
குடிக்க நீர் இல்லை..
பெண்கள் சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகள் குளிக்க, குடிக்க தண்ணீர் வசதி இல்லாமல் இருந்துள்ளது. ஏன் என்று கேட்ட போது, தண்ணீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்துள்ளதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
பேச்சுவார்த்தை
இதனால் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரக் கோரி நளினி, சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த பின் உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார்.
பரோல்
நளினி 6 மாதம் பரோல் கேட்டு கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி சிறைத் துறைக்கு விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்கள் ஆகியும் அந்த மனு குறித்து எந்த நடவடிக்கையும் சிறைத் துறை எடுக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
விடுதலை எப்போது?
தற்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நளினியின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த மாதம் 18ம் தேதி நளினி சார்பில் தமிழக அரசுக்கு விண்ணப்ப மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள அனைவரும் விரைவில் விடுதலை அடைவார்கள் என்று நம்புகிறோம் என்று வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.