மத்திய அரசிடம் கேட்டது எதுவும் கிடைக்கவில்லை.. அதிமுகவுக்கு திடீர் ஞானோதயம்.. புலம்பல்!
மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படுத்துவதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய அரசின் திட்டங்களை ஒப்புக் கொண்ட போது தமிழகம் மாற்றாந்தாய் போக்கிலேயே நடத்தப்படுவதாக மத்திய அரசை விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் சித்ரகுப்தன் கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை தமிழகம் ஏற்ற போது, மாற்றாந்தாய் மனப்போக்குடனே பாஜக அரசு தமிழகத்தை நடத்துவதாக நமது எம்ஜிஆர் நாளேட்டில் இன்று வெளியாகியுள்ள சித்ரகுப்தன் கவிதை கூறுகிறது.
தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களுக்காக கேட்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, கெட்ட விஷயங்கள் எதுவும் நீங்கவில்லை என்று பாஜக அரசை கடுமையாக சாடி கவிதை எழுதப்பட்டுள்ளது. நமது எம்ஜிஆரில் வெளியாகியுள்ள முழுக் கவிதை விவரம் இதோ :
கச்சத்தீவை தாரை வார்த்து
கடல்சார் உரிமை இழந்தோம்!
காவிரியை மீட்பதற்கு
காலமெல்லாம் முயன்றோம்!
முல்லையாற்று உரிமைக்கு
மோதிச் சண்டை புரிந்தோம்!
பாலாறும் கோளாறாக
பரிதவித்து நின்றோம்!
மேகதாதில் சூது சூழ
மேலும் துன்பம் கண்டோம்!
மீத்தேன் வந்து அச்சுறுத்த
மீளாத் துயரில் உழன்றோம்!
நெடுவாசல் துயராலே
நிம்மதியை இழந்தோம்!
கதிராமங்கலம் கண்ணீர் துடைக்க
உங்களைத் தேடி வந்தோம்!
'உதய்'யை ஒப்புகிட்டு
ஒத்துழைப்பு தந்தோம்!
சேவை மற்றும் சரக்கு வரிக்கு
சேர்ந்து கோஷம் புரிந்தோம்!
'நீட்'டுக்கும் தலைவணங்கி
நெருக்கடியில் நெளிந்தோம்!
'எய்ம்ஸ்' மருத்துவமனை
எப்போது வரும்னு
எதிர்பார்ப்பில் கரைந்தோம்!
வர்தா புயல் நிதிக்கு கையேந்தி
வழிபாத்துக் கிடந்தோம்!
வறட்சி நிவாரணம் வருமான்னு
விழி பிதுங்கி நடந்தோம்!
கேட்டது எதுவும் கிடைக்கல...
கெட்டது எதுவும் நடக்கல
தமிழிசை வந்து தனிக்கதை சொல்ல...
எச்.ராஜாவோ 'ஆண்ட்டி இண்டியன்னு' னு
ஆவேசம் கொள்ள...
ஆளுக்கு ஆளு
இலவசமா
அறிவுரைகள் அள்ள...
கூடவே கழகங்களில்லா தமிழகம்னு
கலர் கலரா கனவுகளில்
காவிகள் துள்ள...
கன்னித் தமிழ் பூமியின் கோப அலையை திசைதிருப்ப
காதல் கிழவரசனோ
கழக அரசைப் பழித்து கதைகள் பல சொல்ல...
மாற்றாந்தாய் போக்கை வெல்ல
மன்றாடுது தமிழுலகம்!
மதியாலே சதியை வெல்வோம்!